My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

கோடையில் பயன்படும் தீவன மரங்கள்!

தீவன மரங்கள்

ருவக்காலச் சுழற்சியில் ஆண்டுதோறும் கோடையின் தாக்குதலை விவசாயிகள் சமாளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. முக்கியமாக, பசுந்தீவனத் தட்டுப்பாடு சற்றுச் சிரமத்தைத் தருகிறது. கோடையில் நிலவும் நீர்த் தட்டுப்பாடும் இதற்கு முக்கியக் காரணமாகும். பசுந்தீவனத்தை உண்பதன் மூலம், கால்நடைகள் தங்களின் குடிநீர்த் தேவையைக் கொஞ்சம் சமாளித்துக் கொள்கின்றன.

பசுந்தீவனம் உணவுத் தேவையைச் சரி செய்வதுடன், இனவிருத்திக்குப் பயன்படும் வைட்டமின் ஏ-யையும் வழங்குகிறது. ஒரு கறவை மாடு தொடர்ந்து ஈனும் போது, அதன் பாலுற்பத்தித் திறனும் கூடிக்கொண்டே போகிறது. இதனால், விவசாயிகள் வெகுவாகப் பயனடைவார்கள்.

எனவே, கோடையில் பசுந்தீவனப் பற்றாக்குறையைச் சமாளிக்க, தீவன மரங்களை வளர்க்க வேண்டும். இந்த மரங்களை வளர்ப்பதற்கு என்று, தனியாக நிலத்தை ஒதுக்க வேண்டிய அவசியமில்லை. மேய்ச்சல் நிலங்களில் இந்த மரங்களை வளர்த்து, மரங்கள் அடர்ந்த மேய்ச்சல் புலமாக உருவாக்கலாம்.

வேலி மற்றும் கால்வாய் ஓரங்களில் வளர்க்கலாம். வீட்டைச் சுற்றியும் வளர்க்கலாம். இப்படி வளர்க்கும் மரங்களை, சரியாகப் பராமரிக்க வேண்டும். தழைப் பறிப்பிலும் சில அறிவியல் நுணுக்கங்களைக் கையாண்டால், கோடையில் பசுந்தீவனத் தட்டுப்பாடு ஏற்படாது.

தழைகளைப் பறிக்கிறோம் என்று சொல்லி, மரத்தை மொட்டையாக்கி விடக் கூடாது. மரத்தின் உயரத்தில் மூன்றில் ஒரு பகுதியில் உள்ள தழைகளை, அந்த மரத்தின் வளர்ச்சிக்கென விட்டுவிட வேண்டும். தழைகள் பறிக்கப்பட்ட ஒரு கிளை, மீண்டும் தழைக்கும் வரையில், அதில் தழைகளை ஒடிக்கக் கூடாது.

இந்தத் தழைப்புக்கான காலத்தைக் கணக்கிட்டுக் கொண்டால், அதற்கு ஏற்றபடி, தழைப் பறிப்பைத் திட்டமிட்டுக் கொள்ளலாம். சுமார் 7.5 செ.மீ. தடிமனுக்கு மேலுள்ள கிளைகளில் தான், தழைகளைப் பறிக்க வேண்டும்.

பசுந்தீவன மரங்கள், தீவனத்தைத் தருவதுடன் நிழலையும் தந்து உதவுகின்றன. எனவே, பசுந்தீவன மரங்களை வளர்ப்பதில் விவசாயிகள் திட்டமிட்டுச் செயல்பட வேண்டும்.

புரதம் நிறைந்த தழையைத் தரும் கல்யாண முருங்கை போன்ற மரக்கன்றுகள், கால்நடைப் பராமரிப்புத் துறையில் கிடைக்கும். மேலும், பூவரசு, சூபாபுல் போன்ற மரங்களையும் வளர்க்கலாம்.

தீவனத் தழைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்து, படிப்படியாக அளவைக் கூட்ட வேண்டும். ஏனெனில், தீவனத்தில் ஏற்படும் திடீர் மாறுதல் கால்நடைகளுக்கு வயிற்று உப்புசத்தை உண்டாக்கும்.

வழக்கமான தீவனங்களை உண்பதில் தங்களைப் பழக்கப்படுத்திக் கொண்ட கால்நடைகளின் உணவில், திடீர் மாற்றம் ஏற்பட்டால் ஒவ்வாமை போன்ற சுகாதாரக் கேடுகள் வரக்கூடும்.

எனவே, இதுவரை சொல்லியுள்ள நுட்பங்களை மனதில் கொண்டு, தீவன மரங்களைப் பயிரிட்டால், கோடையில் ஏற்படும் பசுந்தீவனக் குறையைச் சமாளித்து, கால்நடைகளைச் சிறப்பாகப் பராமரித்து, பண்ணை வருமானத்தைக் கூட்டலாம்.


கோடையில் பயன்படும் தீவன மரங்கள்!

டாக்டர் வி.இராஜேந்திரன்,

மேனாள் இணை இயக்குநர், கால்நடைப் பராமரிப்புத் துறை, நத்தம், திண்டுக்கல் – 624 401.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

மேலும் படிக்கலாம்:

  • பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையப் புடலை இரகங்கள்!

  • பருத்தியில் மாவுப்பூச்சிக் கட்டுப்பாடு!

  • உயர் விளைச்சலைத் தரும் வம்பன் 11 உளுந்து!

  • வெண்கொடிவேலி மூலிகையில் பூச்சி மேலாண்மை!

  • ஆடிப்பட்டத் துவரை சாகுபடி!

  • மரவள்ளியைத் தாக்கும் சிலந்திப் பூச்சி!

  • பாக்கு சாகுபடி!

  • ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

  • மக்காச்சோளத்தைத் தாக்கும் அமெரிக்கன் படைப்புழு!