இன்று பல பகுதிகளில் ஊடுபயிர் சாகுபடி மற்றும் வரப்புப் பயிர் சாகுபடியைச் செய்யத் தயக்கம் காட்டும் விவசாயிகள், ஆள் பற்றாக் குறையால் வரிசை விதைப்பு அல்லது வரிசை நடவை மேற்கொண்டு வருகின்றனர்.
உரிய பயிர் எண்ணிக்கையைப் பேணுவதில்லை. உரிய இடைவெளி விட்டால் தான் எல்லாப் பயிரும் சீராக விளையும்.
தொடர் சாகுபடி என்பது, நிலத்தில் ஏற்கெனவே சாகுபடி செய்த பயிர், ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் அறுவடைக்குத் தயாராக இருக்கும் போது,
இன்னொரு பயிரை, நில ஈரம் மற்றும் மண்வளத்தைக் கருத்தில் கொண்டு விதைத்து விடுதல் அல்லது நடவு செய்தல் ஆகும்.
ஓட்டப் பந்தயத்தில் தொடர் ஓட்டம் இருப்பதைப் போல, பயிரின் வயதைக் கருத்தில் கொண்டு, முதல் பயிர் அறுவடைக்குத் தயாரானதும், அடுத்த பயிரை இட வேண்டும்.
இதனால், ஆள் தேவை மற்றும் நிலத் தயாரிப்புச் செலவைக் கணிசமாகக் குறைக்கலாம்.
குறிப்பாக, எந்த ஒரு தாவரமும் தனது தேவைக்கு மேல், ஒரு சொட்டு நீரையோ, ஒரு கிராம் உரத்தையோ கிரகிக்க முடியாது என்னும் உண்மை பலருக்குத் தெரியவில்லை.
விவசாயிகளில் பலர், ஆற்றுநீர் வந்தாலோ, அருகில் நீர் கிடைத்தாலோ, அதிகமாகப் பாய்ச்சி, களைகளை முளைக்க விட்டு அவதிப் படுகிறார்கள்.
தென்னந் தோப்புக்கும் இதே நிலை தான். அதிக நீரானது அதிகக் களைக்கு வழி வகுக்கும். பயிருக்குக் கிடைக்க விடாமல், பள்ளமான பகுதிக்குச் சத்துகளை இடமாற்றம் செய்து விடும்.
சில சமயம், அருகில் உள்ள தோட்டங்களுக்கு நம் நிலத்தின் சத்துகள் கரைத்து எடுத்துச் செல்லப்படும்.
களைகள் பெரிதாக வளர ஊக்குவிக்கும் தானியப் பயிர்கள் சாகுபடியான இடங்களில், பசுந்தாள் உரப்பயிர் அல்லது பயறுவகைப் பயிர்களைத் தொடர் சாகுபடி முறையில் பயிர் செய்யலாம்.
தக்காளி, கத்தரியைப் பயிர் செய்த நிலத்தில், கொத்தவரை, குத்தவரையைப் பயிரிடலாம். பந்தல் பயிர்களின் நடுவில், தக்காளி, மிளகாயைப் பயிரிடலாம்.
இதனால் நேரம், பணம், மனித வளம் மீதமாகும். மேலும் விவரம் பெற 98420 07125 என்னும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

முனைவர் பா.இளங்கோவன், வேளாண் இணை இயக்குநர், காஞ்சிபுரம்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



