உலர் தீவனத்தை விடப் பசுந்தீவனத்தைத் தான் கால்நடைகள் விரும்பி உண்ணும். இதனால், உண்ணும் தீவன அளவு அதிகமாகும்.
பசுந்தீவனம் எளிதில் செரிக்கும். அதனால், சத்துகள் அதிகளவில் உடலுக்குக் கிடைக்கும்.
பசுந் தீவனத்தில், புரதம் மற்றும் தாதுப்புகள் அதிகளவில் உள்ளன. இவை, கால்நடைகளின் வளர்ச்சி மற்றும் அதிகப் பால் உற்பத்திக்குத் தேவை.
பசுந் தீவனத்தில் உயிர்ச் சத்துகள், முக்கியமாக, பீட்டா கரோட்டின் நிறைந்து இருக்கும்.
இது, வைட்டமின் ஏ-யின் தேவையைச் சரி செய்வதோடு, கால்நடைகளில் கருமுட்டை உற்பத்தி மற்றும் இனப்பெருக்கம் நிகழப் பெரிதும் உதவும்.
பசுந்தீவனம் கொடுத்தால் பசுக் கிடேரிகள் 15-18 மாதங்களில் பருவமடையும்.
உடல் எடை 200-250 கிலோ இருக்கும். 28-30 மாதங்களில், முதல் கன்றை ஈனும்.
அடுத்தடுத்து, 12-14 மாத இடைவெளியில் மீண்டும் மீண்டும் கன்றுகளைப் பெறவும் ஏதுவாகும்.
ஏனெனில், கறவை மாடு ஆண்டுக்கு ஒரு கன்று வீதம் ஈன்றால் தான், பண்ணை சிறப்பாக இருக்கும்.
பசுந்தீவனம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதால், உடல் நலம் மேம்படும்.
கால்நடைகளின் வாழ்க்கைக் காலமும் கூடும். உலர் தீவனத்துடன் பசுந் தீவனத்தைச் சேர்த்துத் தரும் போது, உலர் தீவனத்தை உண்ணும் அளவும், செரிக்கும் தன்மையும் கூடும்.
பசுந்தீவனத்தைக் கொடுத்தால், கால்நடைகளில் மலச்சிக்கலைத் தவிர்க்கலாம். அடர் தீவனச் செலவு 20 சதம் வரை குறையும்.
தொகுப்பு: பசுமை
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



