அசைபோடும் விலங்குகளில் செரிமானச் சக்தியைத் தூண்டவும், கழிச்சல் நோயைக் கட்டுப்படுத்தவும் ஆவாரை பயன்படுகிறது. பொதுவாகக் கால்நடைகளில் நோயெதிர்ப்புச் சக்தியைத் தூண்டும் மூலிகையாக ஆவாரை உள்ளது. ஆடு மாடுகள் செரிமானச் சிக்கலால் பாதிக்கப்படும் போது, இளம் ஆவாரை இலைகளைச் சிறிதளவு சுண்ணாம்புடன் சேர்த்து அரைத்து, தீவனத்தில் கலந்து கொடுக்கலாம்.
மாடுகளைத் தாக்கும் வெப்ப அயர்ச்சியைப் போக்க, ஆவாரம் பூக்களுடன் வல்லாரை, வெள்ளறுகு, சீரகம் ஆகியவற்றைக் கலந்து இடித்து, புல் அல்லது மற்ற பசுந்தீவனத்துடன் சேர்த்துக் கொடுக்கலாம். ஆவாரம் தண்டின் பட்டையை எடுத்து, நீரிலிட்டுக் கொதிக்க வைத்துக் கொடுத்தால், மாடுகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்குக் கட்டுப்படும்.
குறிப்பாக, தென் மாவட்டங்களில் உள்ள பழங்குடி மக்கள், பட்டையைக் காய்ச்சிக் கசாயத்தை எடுத்து, பூண்டு, மிளகுப் பொடியுடன் கலந்து மாடுகளுக்குக் கொடுக்கின்றனர். இது மாடுகளில் மலச்சிக்கல் ஏற்படும் போது சிறந்த பேதி மருந்தாகப் பயன்படுகிறது. மேலும், இதன் இலையை அரைத்துத் தோலில் தடவினால், ஆடு மாடுகளில் இருக்கும் வெளிப்புறப் புண்கள் ஆறிவிடும்.
மேலும், உருண்டைப்புழு, நாடாப்புழு, தட்டைப் புழுக்களைக் கட்டுப்படுத்தும் மருந்தாகவும், கல்லீரல் தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்தி, அதன் இயக்கத்தைக் கூட்டும் மூலிகை மருந்தாகவும் ஆவாரை பயன்படுகிறது.
எனவே, மருத்துவக் குணமுடைய ஆவாரையைக் கொண்டு நாம் வளர்க்கும் கால்நடைகளுக்கு முதலுதவிச் சிகிச்சையைச் செய்யப் பழகிக் கொள்ளுதல் அவசியம்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



