My page - topic 1, topic 2, topic 3

நெல் மகசூலை அதிகப்படுத்த உதவும் அசோலா!

நெல் மகசூலை அதிகப்படுத்த உதவும் அசோலா!

குறிப்பிடத் தகுந்த அளவுக்குத் தழைச்சத்தை நிலைநிறுத்தி வளரும் பயிர்களுக்கு அளிக்கும் அசோலா, சயனோ பாக்டீரியா வகையைச் சார்ந்தது. அசோலா நீரில் தனியே மிதந்து வாழும் பெரணிவகைத் தாவரமாகும். தாவரத்துக்குள்ளே இருந்து செயல்பட்டு நைட்ரஜன் என்னும் தழைச்சத்தை நிலைப்படுத்தும் அசோலா, அனபீனா எனப்படும் ஒருவகை நீலப்பச்சைப் பாசியாகும். நெல் வயல்களில் உற்பத்தியை அதிகரிக்கும் வண்ணம் பல ஆண்டுகளாகவே ஆசிய கண்டத்தின் பல்வேறு பகுதிகளில் அசோலா பயன்படுத்தப்படுகிறது. அசோலா அதன் பச்சை உயிர்ம நிலையில் 0.2-0.3% தழைச்சத்தையும் உலர் எடையில் 3.5% தழைச்சத்தையும் கொண்டுள்ளது.

அசோலாவில் ஏழுவகைச் சிற்றினங்கள் உள்ளன. அவற்றில், இந்தியாவில் பரவலாகக் காணப்படுவது அனபீனா பின்னேட்டா ஆகும். நெல் உற்பத்தியைப் பாதிக்கும் முக்கியக் காரணிகளில் ஒன்று தழைச்சத்து. அனபீனா அசோலா என்னும் சயனோ பாக்டீரியா வகையைச் சார்ந்த நீலப்பச்சைப் பாசி, அசோலா பின்னேட்டா என்னும் பெரணிவகைத் தாவரங்களின் இலைகளில் உள்ள குழிகளில் தங்கி, இணைந்து செயல்பட்டுத் தழைச்சத்தை நிறுத்துகிறது.

அசோலாவின் சிறப்பு

அசோலா பெரணியானது இப்புவியிலேயே மிகவும் தனித்தன்மை வாய்ந்த தாவரமாகும். ஏனெனில், இது வளர்வதற்கு மண் தேவையில்லை. மேலும், மிக வேகமாக வளரும் தன்மையுடைய அசோலா, 2-3 நாட்களில் இரண்டு மடங்காக அதிகரிக்கும். வளி மண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடை நிலைநிறுத்தி, தழைச்சத்தைச் சார்ந்த பொருள்களை உருவாக்குவதால், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளைக் குறைக்கும்.

மண்வளம், உற்பத்திறன் உயரும்

தழைச்சத்தை நிலை நிறுத்துவதோடு, பல்வேறு வகையான நன்மைகளை நெற்பயிருக்கு அளிக்கிறது அசோலா. அடர்த்தி மிகுந்த, தடித்த அசோலாவானது, நெல் வயல்களில் அடர்ந்து பரவி, களைகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது. அசோலா எளிதில் சிதைவடைவதால் தழை, மணி மற்றும் இதர சத்துகள் நெல் வயல்களின் நீரில் வெளியிடப்படுகின்றன. இவற்றை நெற்பயிர்கள் எளிதில் எடுத்துக் கொள்ளும்.

நெற்பயிரைக் காட்டிலும் சாம்பல் சத்தை கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையது அசோலா. எனவே, சாம்பல் சத்துக் குறைவாக உள்ள மண்ணில், அசோலா சிதைவடையும் போது, சாம்பல் சத்து எளிதாக நெற்பயிர்களுக்குக் கிடைக்கிறது. மண்வளத்தை நீண்ட காலத்துக்கு மேம்படுத்தி வைப்பதில் இதன் பங்கு மகத்தானது. அங்ககச் சத்தை மண்ணுக்கு அளிப்பதோடு, அங்ககக் கரிமம் மற்றும் சத்துகளை வெளியிட்டு மண்வளத்தை மேம்படுத்துகிறது.

ஆலைகளில் இருந்து வெளிவரும் கழிவு நீரிலுள்ள குரோமியம், காப்பர், துத்தநாகம் போன்ற கடின உலோகங்களை நீக்கும் அசோலா, நச்சுத்தன்மை வாய்ந்த கடின உலோகங்களை நீக்குவதில் உயிர்வளி நிவர்த்தியாகச் செயல்படுகிறது. நிலம் முழுவதையும் மூடும் அசோலா, நீருக்குள் சூரியவொளி புகுவதைக் குறைப்பதால், நெல் வயல்களில் ஆவியாதல் மூலம் ஏற்படும் தழைச்சத்து இழப்புத் தடுக்கப்படுகிறது.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மேலும் அசோலா, மண்ணில் அமில காரத் தன்மையை உயர விடாமல் தடுக்கும். இதற்குப் பயிர் வளர்ச்சி ஊக்கிகளை அளிக்கும் தன்மையிருப்பதால் பயிரின் தரம் உயரும். இரட்டைப் பயிராக அசோலாவை நெல்லுடன் சேர்த்து வளர்த்தால், மீத்தேன் வெளியாதல் குறைந்து, நெல் மகசூல் அதிகமாகும். அசோலா 40-60 கிலோ தழைச்சத்தை நெல்லுக்கு அளிக்கிறது.

அசோலாவை இடும் முறை

அசோலாவை ஊடுபயிராக அல்லது பசுந்தாள் உரப்பயிராக இடலாம். இதை, ஊடுபயிராக வளர்க்கும் போது, நெல் நடவு முடிந்து 7-8 நாட்களுக்குப் பிறகு மிதித்து விட்டால் அதிகளவு தழைச்சத்தை அளிக்கும். தனிப்பயிராக வளர்க்கையில், வயலில் மிதித்து விடுவதற்கு 4 நாட்களுக்கு முன் நீரை வெளியேற்ற வேண்டும். அசோலா விதைகளை உற்பத்தி செய்வதில்லை. உடல் இனப்பெருக்கத்தின் மூலம் பெருக்கமடைகிறது. எனவே, ஆண்டு முழுவதும் உயிருள்ள அசோலா காரணிப் பொருளை (இனாக்குலத்தை) ஒரு தொட்டியிலோ அல்லது சிறு குட்டையிலோ வளர்க்க வேண்டும். வளர்ப்பிடம் 4-5 மீ. நீளமும் 2 மீ. அகலமும், 0.5 மீ. ஆழமும் உடையதாக இருக்க வேண்டும். இப்பரப்புக்கு 250-500 கிலோ எடையுள்ள அசோலா காரணிப் பொருளைப் பயன்படுத்த வேண்டும்.

அசோலா வளர்ப்பு முறை

தட்டு வளர்ப்பு முறை: 2 மீட்டர் நீளம் 1 மீட்டர் அகலம், 20 செ.மீ. உயரமுள்ள காப்பிடப்பட்ட இரும்பு அல்லது சிமெண்ட அல்லது நெகிழித் தட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகளவில் அசோலா தேவையெனில், அளவை அதிகமாக்கிக் கொள்ளலாம். அத்தட்டின் மீது 5-6 கிலோ நன்கு சலிக்கப்பட்ட மண்ணை நிரப்ப வேண்டும். அதனுள் 5-6 செ.மீ. அளவுக்கு நீரை விட்டு நன்கு கலக்க வேண்டும்.

அதன் மீது 300-400 கிராம் ராக் பாஸ்பேட்டைத் தூவ வேண்டும். அதன் மேல் அசோலா உயிருள்ள காரணிப் பொருளைத் தூவ வேண்டும். பின், வெய்யில் படுமாறு தட்டை வைக்க வேண்டும். கோடை மாதங்களில் அசோலாவின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். நன்கு மலர்ந்து தடித்து வளர்ந்த பின்னர் நீர் விடுவதை நிறத்த வேண்டும்.

நாற்றங்கால் வளர்ப்பு முறை

நெல் நாற்றங்காலுக்கு ஒதுக்கப்பட்ட பரப்பில் பாதியை அசோலா வளர்ப்புக்கு ஒதுக்க வேண்டும். அதை, 20 மீட்டர் நீளம், 2 மீட்டர் அகலமுள்ள பாத்திகளாகப் பிரிக்க வேண்டும். ஒரு பாத்திக்கு 250 கிராம் ராக் பாஸ்பேட் வீதம் இட வேண்டும். இட்டபின் நீரை விட வேண்டும். ராக் பாஸ்பேட்டை இட்ட பத்து நாட்களுக்குப் பின் 8-10 செ.மீ. அளவுக்கு நீரைப் பாய்ச்ச வேண்டும்.


முனைவர் .உதயநந்தினி

முனைவர் வைஷ்ணவி, முனைவர் ச.சங்கமித்ரா, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயமுத்தூர்-641003.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

உங்கள் கருத்து?

மேலும் படிக்கலாம்:

  • வேலை வாய்ப்பைத் தரும் அசோலா!

  • மேலே மின்சார உற்பத்தி; கீழே பயிர் சாகுபடி!

  • முயல் மசால் சாகுபடி!

  • பசுந்தாள் உரப்பயிர்கள் சாகுபடி!

  • கோடை உழவு கோடி நன்மை தரும்!

  • நாவற் பழங்களைக் கையாளும் முறைகள்!

  • சன்னல் ஓரத்தில் சத்துச் சுரங்கம்!

  • வேலி மசால் சாகுபடி!

  • அகத்திக்கீரை சாகுபடி!