நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் வட்டாரத்தில் வாய்க்கால் பாசனம் மூலம் அதிகளவில் நெல் விளைகிறது. அதனால், இப்பகுதி விவசாயிகளின் நெல்லுக்கு அதிக விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2013ஆம் ஆண்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை, குமாரப்பாளையத்தில் திறக்க உத்தரவிட்டார். இவ்வகையில், எலந்தக்குட்டையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்தாண்டு பள்ளிப்பாளையம் வட்டாரத்தில் 4,180 எக்டர் பரப்பில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தமிழக அரசு ஒரு குவிண்டால் சன்ன நெல்லுக்கு 1,840 ரூபாயும், பொதுவான நெல்லுக்கு 1,800 ரூபாயும் வழங்கி வருகிறது. வணிகர்கள் வழங்குவதை விட ஒரு குவிண்டாலுக்கு தமிழ்நாடு அரசு நூறு ரூபாய்க்கு மேல் கூடுதலாக வழங்கி வருகிறது.
விவசாயிகள் எவ்வளவு நெல்லைக் கொண்டு வந்தாலும் வாங்கிக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பள்ளிப்பாளையம் பகுதியில் நெல் சாகுபடிக்கு முழுமையாகத் தண்ணீர் கிடைக்குமா கிடைக்காதா என்ற நிலை இருந்தது. இதை முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு சென்றதால், கூடுதலாக 8 நாட்களுக்குத் தண்ணீரை விட உத்தரவிட்டார். இதனால் இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் நன்கு விளையும் அளவுக்குத் தண்ணீர் கிடைத்தது. இப்படி விளைந்த நெல்லை எலந்தக்குட்டையில் அமைந்துள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நல்ல விலைக்கு விற்று விவசாயிகள் பயனடைந்துள்ளனர். அவர்களில் ஒருவரான மு.விஜயகுமார் கூறியதாவது:

“நான் குமாரபாளையம் வட்டம், களியனூர், கட்டிப்பாளையத்தில் விவசாயம் செய்கிறேன். எனக்கு 3 ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலத்தில் ஆந்திரா பொன்னி நெல்லைப் பயிரிட்டேன். மழை குறைவாக பெய்ததால் நெல் சாகுபடிக்குக் கூடுதலாக தண்ணீர் வழங்க வேண்டுமென்று தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம். அதையேற்று, கூடுதலாக 8 நாட்கள் தண்ணீர் விட உத்தரவிட்டதால் எங்களுக்கு 120 மூட்டை நெல் கிடைத்தது.
இந்த நெல்லை எலந்தக்குட்டை நெல் கொள்முதல் நிலையத்தில் விற்றேன். ஒரு குவிண்டாலுக்கு 1,840 ரூபாய் கிடைத்தது. ஆனால், வியாபாரிகள் ஒரு குவிண்டாலுக்கு 1,730 ரூபாய் தான் தருகிறார்கள். நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கூடுதலாக 100 ரூபாய் வழங்குவது விவசாயிகளுக்குப் பேருதவியாக உள்ளது. இந்த நிலையத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தி, விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றி வைத்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.
அடுத்து, விவசாயி கு.சந்திரன் கூறியதாவது:

“நான் குமாரபாளையம் வட்டம், களியனூரில் விவசாயம் செய்கிறேன். எனக்கு 3.5 ஏக்கர் நிலம் உள்ளது. இதில், ஆந்திரா பொன்னி நெல்லைப் பயிரிட்டேன். 100 மூட்டை நெல் கிடைத்தது. இந்த நெல்லை வியாபாரிகள் குறைந்த விலைக்குக் கேட்டார்கள். அதனால், எலந்தக்குட்டையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்றேன். இங்கே குவிண்டாலுக்குக் கூடுதலாக 100 ரூபாய் வரை கொடுத்தார்கள். இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் மூலம் விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, நானும் எனது ஊர் விவசாயிகளும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்றார்.
மு.அண்ணாதுரை,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், நாமக்கல் மாவட்டம்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.

