இந்தியா, உலகின் மிகப்பெரிய தானிய உற்பத்தி நாடுகளில் ஒன்று. 2024-25-ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உணவுத் தானிய உற்பத்தி 353.96 மில்லியன் டன்னாகப் பதிவாகியுள்ளது. இதில், அரிசி உற்பத்தி 149 மில்லியன் டன்னையும், கோதுமை உற்பத்தி 117 மில்லியன் டன்னையும் கடந்துள்ளது. ஆனால், இத்தனை பெரிய உற்பத்தி இருந்தாலும், தானியங்களைப் பாதுகாப்பாகச் சேமிப்பது, இந்தியாவுக்கு இன்னும் மிகப்பெரிய சவாலாகவே உள்ளது.
தானியங்களைக் காக்கும் Radio frequency
சேமிப்புக் காலத்தில் பூச்சித் தாக்குதல், ஈரப்பதம், பூஞ்சை வளர்ச்சி மற்றும் தரக்குறைவு காரணமாக, இந்தியாவில் ஆண்டுதோறும் கணிசமான உணவுத் தானியங்கள் வீணாகின்றன. இந்தியாவில் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகள் சுமார் 10 சதம் வரை இருக்கலாம் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சில மதிப்பீடுகளின்படி, ஆண்டுக்கு ரூ.1.53 இலட்சம் கோடி மதிப்பிலான உணவுப் பொருள்கள் இழக்கப்படுகின்றன.
குறிப்பாக, கிடங்குகளில் சேமித்து வைக்கப்படும் அரிசி, கோதுமை, பருப்பு, மக்காச்சோளம் போன்ற தானியங்களில் பூச்சித் தாக்குதல் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. இந்திய தானியச் சேமிப்பு மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவன (IGMRI) மதிப்பீட்டின்படி, சேமிப்பு இழப்புகளில் பூச்சிகள் மட்டும் 2 முதல் 4.2 சதம் வரை பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதைக் கட்டுப்படுத்த, பல ஆண்டுகளாக phosphine போன்ற இரசாயனப் புகை மூட்டும் முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆனால், இம்முறைகள் மனித உடல் நலம் மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. மேலும் சில பூச்சிகள், இரசாயனங்களுக்கு எதிர்ப்பு சக்தியையும் உருவாக்கத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் உலகளவில் விஞ்ஞானிகள் அதிகக் கவனம் செலுத்தும் புதிய தொழில் நுட்பமாக, ரேடியோ ஃப்ரீக்வென்சி என்னும் ரேடியோ அலைத் தொழில்நுட்பம் (Radio frequency) உருவெடுத்து உள்ளது.
ரேடியோ ஃப்ரீக்வென்சி (Radio frequency) என்பது, மின்காந்த அலைகளின் ஒரு பகுதி. செல்பேசி, வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றில் பயன்படும் அலைகளே இவை. ஆனால், உணவுத் துறையில், குறிப்பிட்ட அதிர்வெண் கொண்ட ரேடியோ அலைகளைப் பயன்படுத்தி, தானியங்களில் பூச்சிகளை அழிக்கும் நவீன முறை தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது.
இந்த முறையில், இரண்டு மின் தகடுகளுக்கு இடையில் தானியங்களை வைத்து ரேடியோ அலைகள் செலுத்தப்படும். இந்த அலைகள், தானியத்தின் உள்ளே வெப்பத்தை உருவாக்கும். இதனால், பூச்சிகள் மற்றும் அவற்றின் முட்டைகள் அழிக்கப்படும்.
சாதாரண வெப்பமூட்டும் முறைகளில் வெப்பம் வெளியிலிருந்து உள்ளே செல்லும். அதனால், முழுத் தானியமும் சூடாக நீண்ட நேரமாகும். ஆனால், ரேடியோ அலை முறையில், வெப்பம் நேரடியாகத் தானியத்தின் உள்ளேயே உருவாவதால், செயல்முறை மிகவும் வேகமாக நடைபெறும். இதன் மூலம், தானியத்தின் நிறம், சுவை, தரம் மற்றும் சத்துகள் பெரும்பாலும் பாதுகாக்கப்படும்.
இந்தத் தொழில் (Radio frequency) நுட்பத்தின் மிக முக்கிய அம்சம், Selective Heating எனப்படும் தன்மையாகும். தானியங்களில் இருக்கும் பூச்சிகளின் உடலில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், ரேடியோ அலைகள் அவற்றை, தானியங்களை விட வேகமாகச் சூடாக்கும். இதனால், பூச்சிகள் மற்றும் அவற்றின் முட்டைகள் விரைவில் அழியும். அதே நேரத்தில், தானியத்தின் தரம் அதிகமாகப் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படும்.
அறிவியல் நோக்கில் பார்க்கும் போது, உணவுப் பொருள்களில் இருக்கும் நீர் மூலக்கூறுகள் ரேடியோ அலைகளின் (Radio frequency) தாக்கத்தால் வேகமாக அசையும். இந்த அசைவினால் உருவாகும் உராய்வே வெப்பமாக மாறும். அதிக ஈரப்பதமுள்ள பகுதிகள் அதிக வெப்பத்தை உருவாக்குவதால் பூச்சிகள் முதலில் அழியும்.
இன்றைக்கு ரேடியோ அலைத் தொழில் நுட்பம், அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், வேர்க்கடலை, பாதாம், பிஸ்தா, வால்நட், மிளகு, மிளகாய்த்தூள், சீரகம், மஞ்சள் மற்றும் பல உலர் உணவுப் பொருள்களில் சோதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, மசாலாப் பொருள்கள் மற்றும் ஏற்றுமதித் தரமான தானியங்களில், இந்தத் தொழில் நுட்பம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தியாவில் தற்போது உணவுத் தானியச் சேமிப்புக் கட்டமைப்பை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. 2025-ஆம் ஆண்டில் இந்திய உணவுக் கழகம் (FCI) மற்றும் மாநில நிறுவனங்களின் மொத்தச் சேமிப்புத் திறன் 917 இலட்சம் மெட்ரிக் டன்னைக் கடந்துள்ளதாக அரசுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில், சேமிப்புத் திறன் பற்றாக்குறை மற்றும் பாரம்பரியக் கிடங்கு முறைகள் காரணமாக இன்னும் பல இடங்களில் தானிய இழப்புகள் தொடர்கின்றன. 2025-ஆம் ஆண்டு வெளியான தகவலின்படி, பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் கடந்த ஐந்து ஆண்டுகளில் 8,226 மெட்ரிக் டன் உணவுத் தானியங்கள் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டிலும் ஆயிரக்கணக்கான டன் தானிய இழப்புகள் பதிவாகியுள்ளன. இந்த நிலைமை, நவீனச் சேமிப்பு மற்றும் பூச்சிக் கட்டுப்பாட்டுத் தொழில் நுட்பங்களின் அவசியத்தைத் தெளிவாகக் காட்டுகிறது.
ரேடியோ அலைத் தொழில் நுட்பம், இரசாயனமில்லாப் பாதுகாப்பை வழங்குவதால், இது Green Technology என உலகளவில் பார்க்கப்படுகிறது. குறைந்த நேரத்தில் செயல்படுவது, குறைந்த எரிசக்திப் பயன்பாடு மற்றும் உணவின் தரத்தைப் பாதுகாப்பது போன்ற அம்சங்கள் இதன் முக்கியப் பலன்களாக உள்ளன.
இந்தத் தொழில் நுட்பம் (Radio frequency) இன்னும் முழுமையாக எல்லா நாடுகளிலும் வணிக நோக்கில் பரவவில்லை என்றாலும், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் ஆராய்ச்சிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்தியாவிலும் உணவுக் கிடங்குகள், விதைச் சேமிப்பு மையங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களில் எதிர்காலத்தில் ரேடியோ அலைத் தொழில் நுட்பம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் இன்று பாதுகாப்பான மற்றும் இரசாயனமில்லா உணவுகளை நோக்கி நகர்கிறது. அந்த மாற்றத்தின் மையத்தில், ரேடியோ அலைத் தொழில் நுட்பம் புதிய நம்பிக்கையை உருவாக்கி வருகிறது.

முனைவர் மு.வெங்கிடசாமி,
உதவிப் பேராசிரியர் – பால்வளப் பொறியியல் துறை, கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையம், தலைவாசல் கூட்டுச் சாலை, சேலம் – 636 112.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.

