இந்தியாவில் இன்னும் பெரும்பாலான விவசாயிகள், அவர்களின் பாட்டன்- முப்பாட்டன் சொல்லிக் கொடுத்து விட்டுச் சென்ற பாரம்பரிய முறைகளைத் தான் கையாளுகிறார்கள். இவை, அக்கால இயற்கை விவசாயத்துக்கு ஏற்றவை. ஆனால், இக்கால நவீன விவசாயத்துக்குச் சரியாக வருமா?
விதை மாறி விட்டது; உரம் மாறி விட்டது; தொழில் நுட்பம் மேம்பட்டு விட்டது; ஆனால், விவசாயிகள் மட்டும் தாத்தன்- பாட்டன் வழி என்றால், எப்படி? இதுதான் இன்றைக்கு இந்தியாவில் இன்றைய விவசாயிகளின் நிலைமை!
மேலை நாடுகளில் விவசாயத்தை, ஒரு தொழிலாகச் செய்கிறார்கள்; அதனால் அவர்கள் நல்ல இலாபம் ஈட்டுகிறார்கள். ஆனால், இந்தியாவில் பாரம்பரியத்துக்கு முன்னுரிமை தந்து கொண்டிருப்பதால், கஷ்டமும் நஷ்டமும் தான் மிஞ்சுகின்றன.
ஆனால், பாசனப் பற்றாக்குறை, வேலையாட்கள் பற்றாக்குறை, இடுபொருள்கள் விலையுயர்வு, கூலியுயர்வு போன்றவற்றால், நமது விவசாயிகளும், நவீனத்தை நோக்கி நகர்வது சற்று ஆறுதலான விஷயமாகும்!
காளைகளைப் பூட்டி, ஏர் ஓட்டிய காலமும், கைகளால் நடவு நட்ட காலமும் மாறி, இயந்திரங்களையும், கருவிகளையும் பயன்படுத்தும் காலம் வந்து விட்டது. ஆனால், அவற்றை இயக்கும் வேலைகளை இன்றளவும் மனிதன் தான் செய்கின்றான். இப்போது அதற்கும் மாற்றாக, AI எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வந்து விட்டது!
AI என்றால் என்ன?
AI (Artificial intelligence) என்பது, நொடிப் பொழுதில் சிந்தித்து, மனித மூளையை விட, மிக ஆழமாக ஆராய்ந்து முடிவெடுக்கும், செயற்கை நுண்ணறிவு ஆற்றல்!
இது, கணினி செய்யும் வேலை தான் என்றாலும், வேளாண்மையில் இதற்கு கேமராக்கள், சென்சார்கள் போன்றவை உதவுகின்றன. அவை, மண்ணின் தன்மை, பயிரின் தன்மை, காலநிலை என, அனைத்துத் தரவுகளையும் தனித்தனியாகச் சேகரித்துக் கொடுப்பதால், AI தொழில் நுட்பம் புத்திசாலித்தனமாகச் செயல்பட முடிகிறது.
விவசாயத்தில் எவ்வாறு செயல்படும் AI?
+ நோய் மற்றும் பூச்சித் தாக்குதல்களைத் தொடக்கத்திலேயே கண்டறிந்து விடும்.
+ பயிருக்குத் தேவையான நீர், உரம், பூச்சிக்கொல்லி மருந்தை அதுவே கணக்கிட்டுக் கூறிவிடும்.
+ தானியங்கி இயந்திரங்கள் மூலம் வேலைகளையும் எளிதாக்கி விடும்.
+ விளைச்சலையும் முன்கூட்டியே கணித்துக் கூறி, விவசாயிகளுக்குத் துணை நிற்கும்.
+ மொத்தத்தில் செலவைக் குறைத்து, பயிர்களைக் காத்து, விளைச்சலைப் பெருக்க உதவும்!
புதிய அத்தியாயம்
இதுவரை மனிதனால் மட்டுமே இயக்கப்பட்டு வந்த டிராக்டர்கள் மற்றும் அறுவடை இயந்திரங்கள், இப்போது தானாக இயங்கும் AI தொழில் நுட்பத்துக்கு மாறி வருகின்றன.
இருந்த இடத்தில் இருந்து, ஸ்மார்ட் ஃபோன் மூலம் தானியங்கி பம்பு செட்டுகள், சொட்டுநீர்க் கருவிகளை இயக்கும் வசதிகள் எல்லாம் ஏற்கெனவே வந்து விட்டன. சொட்டுநீர்க் கருவியில் உரம், பூச்சிக்கொல்லி மருந்தை இருப்பு வைத்து விட்டால், நிலத்துக்குத் தேவையானதைத் தீர்மானித்து, நீரில் கலந்து கொடுத்து விடும் திறன் முதற் கொண்டு, AI-க்கு உள்ளது. இதனால், விளைச்சல் எப்படி இருக்கும் என்பதையும் அதனால் முன்கூட்டியே கணித்துக் கூறி விட முடிகிறது.
+ இதன் மூலம், விவசாயிகள், அறுவடை மற்றும் விற்பனையைச் சரியான நேரத்தில் தீர்மானிக்க முடியும்!
+ சுருக்கமாகச் சொல்லப் போனால், AI தொழில் நுட்பத்தால், விவசாயத்தில் துளி நீர்க்கூட வீணாகாது!
+ AI (Artificial intelligence) தொழில் நுட்பம், விவசாயிகளை மகிழ்விக்க வந்துள்ள, ஒரு புதிய அத்தியாயம்!
மகேஷ்வர சீதாபதி
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



