தமிழக அரசின் வேளாண்மை- உழவர் நலத்துறை வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில் கூறியிருப்பதாவது:
கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 2021-2022 ஆம் ஆண்டில் உணவு தானிய உற்பத்திக் கூடியுள்ளது. சாகுபடிப் பரப்பும் அதிகமாகியுள்ளது.
2021-22 ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட நெல், சிறு தானியங்கள் மற்றும் பயறு வகைகள் 120 இலட்சம் மெட்ரிக் டன்னாகும்.
எண்ணெய் வித்துகள், பருத்தி, கரும்பு உற்பத்தியும், சகுபடிப் பரப்பும் அதிகமாகும்.
இது, கடந்த 2020-21 ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட 108 மெட்ரிக் டன்னுடன் ஒப்பிடுகையில், 12 இலட்சம் மெட்ரிக் டன் கூடுதலாகும்.
கடந்த 22 ஆண்டுகளுக்குப் பிறகு, சாகுபடிப் பரப்பு 39.74 இலட்சம் எக்டராக உயர்ந்ததால், நெல், சிறு தானியங்கள் மற்றும் பயறு வகைகளில் அதிகளவு மகசூல் கிடைத்துள்ளது.
டெல்டா பகுதியில் கடந்தாண்டு குறுவை சாகுபடிப் பரப்பான 4.96 இலட்சம் ஏக்கர் என்பது, கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத அதிகளவு நெல் சாகுபடிப் பரப்பாகும்.
இதனால், 2020-21 ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட 104 இலட்சம் மெட்ரிக் டன் நெல்லை விட, 2021-22 ஆண்டில் 120 இலட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டது.
இந்த மகசூல் மற்றும் சாகுபடிப் பரப்பு கூடியதற்கான காரணங்கள்:
தமிழக அரசு, வேளாண்மைத் துறையை, வேளாண்மை- உழவர் நலத்துறை என்று பெயர் மாற்றம் செய்தது.
வேளாண்மைக்கு எனத் தனி நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்தது.
உயர் விளைச்சல் இரகங்கள் மற்றும் வீரிய ஒட்டு விதைகளை விவசாயிகளுக்கு வழங்கியது.
உற்பத்தியைப் பெருக்க, விதைகள், பிற இடுபொருள்கள் மற்றும் இயந்திரங்களை மானிய விலையில், சரியான காலத்தில் வழங்கியது.
வேளாண் விரிவாக்கப் பணியாளர்கள் மூலம், தொழில் நுட்பப் பயிற்சிகள் மற்றும் பயிர்ப் பாதுகாப்பு அறிவுரைகளை, செயல் விளக்கங்கள் மூலம் உரிய காலத்தில் வழங்கியது.
நெல் சாகுபடியை ஊக்கப்படுத்த, டெல்டா பகுதியில், குறுவை சாகுபடித் தொகுப்புத் திட்டத்தைச் செயல்படுத்தியது.
தார்பாலின், ஜிங்க் சல்பேட், ஜிப்சம், உயிர் உரங்கள், வேளாண் கருவிகள் ஆகிய மிகவும் அவசியமான பொருள்களை மானிய விலையில் வழங்கியது.
மாற்றுப் பயிர்களான சிறு தானியங்கள், பயறு வகைகள், நெல் தரிசில் பயறு வகைகள் சாகுபடி ஆகியவற்றை விவசாயிகளிடம் பரவலாக்கம் செய்வதற்காக, மாநில மற்றும் மாவட்ட அளவில் கருத்தரங்குகளை நடத்தியது.
சாகுபடிப் பரப்பைக் கூட்டுவதற்காக, மிகமிக அவசியமான 1.5 இலட்சம் மின் இணைப்புகளை வழங்கியது.
மேலும், மாநில மற்றும் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியது.
இந்த வரலாற்றுச் சாதனைகளை அடைய உறுதுணையாக இருந்த, அனைத்து விவசாயப் பெருமக்களுக்கும், விரிவாக்கப் பணியாளர்களுக்கும், தமிழ்நாடு வேளாண்மை – உழவர் நலத்துறையின் சார்பில் மனமார்ந்த நன்றி! இவ்வாறு அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மு.உமாபதி
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



