அகத்திக் கீரையில் (Agathi Keerai) 36 சதம் புரதமும், 5.5 சதம் கொழுப்பும், 6.40 சதம் நார்ச்சத்தும் இருக்கும். இது, பாசன வசதியுள்ள இடங்களில் நன்கு வளரும். நன்கு வளர்ந்த செடிகளை நமது மார்பளவு உயரத்தில் கிள்ளி விட்டு வாதுகளை உருவாக்குவதன் மூலம் மகசூலைக் கூட்டலாம். அறுவடை செய்த கீரையை 1-2 மணி நேரம் நிழலில் வைத்திருந்து எடுத்து, கால்நடைகளுக்குத் தீவனமாக அளிக்கலாம்.
சாகுபடி விவரம்
அகத்திக் கீரை (Agathi Keerai) நல்ல வடிகால் வசதியுள்ள இடங்களில் இறவைப் பயிராக ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம்.
எக்டருக்கு 25 டன் தொழுவுரம், 10 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து, 12.5 கிலோ சாம்பல் சத்து ஆகியவற்றை அடியுரமாக இட்டு, நன்கு உழுது நிலத்தைப் பண்படுத்த வேண்டும்.
பிறகு, ஒரு மீட்டர் இடைவெளியில் பார்களை அமைத்து, ஒரு மீட்டர் இடைவெளியில் விதைகளை ஊன்ற வேண்டும்.
இவ்வகையில் ஊன்றுவதற்கு எக்டருக்கு 7.5 கிலோ விதைகள் தேவைப்படும்.
பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அல்லது தேவைக்கு ஏற்ப, பாசனம் செய்யலாம்.
அவ்வப்போது களைகளை அகற்றி நிலத்தைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 12.5 கிலோ மணிச்சத்தை மேலுரமாக இட வேண்டும்.
அறுவடை
அகத்திக் கீரை (Agathi Keerai) பயிரிட்டதில் இருந்து எட்டு மாதங்கள் கழித்து முதல் அறுவடையைச் செய்யலாம்.
அடுத்து, 60-80 நாட்களுக்கு ஒருமுறை மீண்டும் மீண்டும் அறுவடை செய்யலாம்.
இவ்வகையில், ஆண்டுக்கு 100 டன் அகத்திக்கீரை மகசூலாகக் கிடைக்கும்.
கொ.ஆ.தொரைசாமி, மு.வீரசெல்வெம், ப.செந்தில்குமார், நா.ஸ்ரீபாலாஜி.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.

